அல்-குர்ஆனின் மொழி பெயர்ப்பை சதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாதா?

குர்ஆன் தன்னுடைய வார்த்தை என்றும், மனித குல சமுதாயம் அனைத்துக்கும் வழிகாட்டுவதற்காக அருளினேன் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் குர்ஆன் புரிந்து கொள்வதற்கு எளிதானது என்றும் குர்ஆன் சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாகவும்,வெளிப்படையாகவும், சொல்கிறது என்றும் கூறுகிறான்.

மேலும் குர்ஆனில் திரித்துக் கூறப்பட்ட விஷயங்கள் எதுவும் இல்லை. மனிதகுல சமுதாயம் அனைத்துக்கும் மிகச்சரியான நேர்வழி காட்டியாக உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஆனால் மனிதர்களில் சிலர், குர்ஆனின் போதனைகள், வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கின்றனர்.

அல்லாஹ் உண்மையை மட்டுமே பேசக் கூடியவன், மனிதனின் நினைப்புகள் எல்லாம் தவறானவைகள். அல்லாஹ்வின் வார்த்தை, மனிதனின் வார்த்தை இரண்டில் நாம் எதையாவது தேர்வு செய்ய நாடினால், அல்லாஹ்வின் வார்த்தையை மட்டும் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:-

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; (அல்-குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)

ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)

(நபியே!) யார் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் வெறும் வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ, இன்னும் யாரை இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றி விட்டதோ அவர்களை விட்டு விடும். எனினும் அவர்களுக்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த செயல்களின் காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் (எனும் உண்மையை) குர்ஆனைக் கொண்டு நினைவுறுத்தும். அந்த ஆத்மாவுக்கு அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலரோ, பரிந்து பேசுபவரோ இல்லை; (தாங்கள் செய்த பாவத்திற்கு) ஈடாக (தங்களால் இயன்ற) அத்தனையும் கொடுத்தாலும், அது அவர்களிடமிருந்து ஒப்புக்கொள்ளப் பட மாட்டாது; இவர்கள் தாங்கள் செய்த செய்கைகளாலேயே தங்களை நாசமாக்கிக் கொண்டார்கள்; இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இவர்களுக்குக் கொதிக்கும் நீரும் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 6:70)

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (அல்-குர்ஆன் 15:9)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.  (அல்-குர்ஆன் 12:1-2)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:89)

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் – பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். (அல்-குர்ஆன் 19:97)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). (அல்-குர்ஆன் 18:1-2)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:99)

குர்ஆனில் போதனைகள், மற்றும் வழிகாட்டுதல்கள் யாவும் சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது என்று புனித குர்ஆனில் ஒரு வசனத்தில் கூட அல்லாஹ் சொல்லவில்லை, இதற்கு மாறாக,குர்ஆனை புரிந்து கொள்வதற்கு, சாதாரண அறிவு போதும் என்று அல்லாஹ் குர்ஆனில் அவ்வப்போது கூறுகிறான்.

குர்ஆனில் போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்வதற்கு, மனிதர்கள் யாரும் விஞ்ஞானிகளாக மாற தேவையில்லை குர்ஆனின் போதனைகள் யாவும், சாதாரண அறிவு படைத்த மனிதர்களால் புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. ஒருவர் செய்ய வேண்டியதெல்லாம் புனித குர்ஆனை திறந்து அதை புரிந்து கொள்ளும் படியாக படிக்க வேண்டும்.

சில கொள்கையற்ற தலைவர்களும், தங்களுக்கு தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களும், மக்களை, புனித குர்ஆனின் போதனைகளை புரிந்து கொள்வதில் இருந்து தடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாமிய உடை அணிந்து குர்ஆனை விட்டும் வழி கெடுக்கின்றனர். குர்ஆன் புரிந்து கொள்ள முடியாது என்றும், சாதாரண மக்களுக்கு புரிவது இல்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்ள நாடினால் அது உங்களை வழிகெடுத்து விடும் என்று திரும்பத் திரும்ப மக்களை எச்சரிக்கின்றார்கள்.மேலும் குர்ஆனின் ஒவ்வெரு வசனங்களும் பல அர்த்தங்களை கொண்டுள்ளது என்றும் ஒரு சில சாமானியர்களால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும் என்றும், ஆகையால் குர்ஆனை புரிந்து கொள்ள வேண்டும் எனில் இவர்களையே பின்பற்ற வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். அவர்கள் குர்ஆனின் தெளிவான கட்டளைகளை மறைத்து, அதன் மூலம் உங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், நீங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை சுருட்டிக்கொண்டு உங்களை குர்ஆனின் பக்கம் வழிகாட்டுவதற்கு பதிலாக தங்களின் பக்கம் வணங்குவதற்கு கொண்டு வருகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்: -

எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்¢ அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்-குர்ஆன் 2:174)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான் மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்-குர்ஆன் 2:159)

யா அல்லாஹ்! முஸ்லிமான எங்களுக்கு குர்ஆனை பொருளுணர்ந்து ஓதி அதன் தெளிவான தகவல்களை புரிந்து கொள்வதற்கு உதவி செய்வாயாக!

யா அல்லாஹ்! கொள்கையற்ற தலைவர்களையும், தங்களுக்குத் தாங்களே மகான்களாக ஆக்கிக்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு கொள்வதற்கு எங்களுக்கு அறிவையும் வீரத்தையும் கொடுப்பாயாக!

யா அல்லாஹ்! அவர்களின் உள் நோக்கங்களை புரிந்து கொள்வதற்கும் அருள் புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவாயாக!

யா அல்லாஹ்! குர்ஆனை படித்து அதன் எளிமையான வசனங்களை புரிந்து கொள்வதற்கு அருள்புரிவாயாக!

யா அல்லாஹ்! எங்களை நேரான வழியில் செலுத்துவதுடன், குர்ஆனிலிருந்து எங்களுடைய அறிவை அதிகப்படுத்துவாயாக!

நன்றி: சுவனத்தென்றல்

Advertisement
Explore posts in the same categories: Uncategorized

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.